Sunday, December 23, 2012

காயம்


வாளும் கீறிய
ஆடிப் பிம்பம்
மறைந்தது நீரில்
தளும்பலாய்
சேரும் கணம்
உடைந்த நுனி
உயிர் மாற்றி
காயமும் உடலில்
கரைந்தது மெய்யாய்

Sunday, December 9, 2012

பல்லுயிர்க் கனா


முற்றத்தில் முளைத்தன
பலவர்ணப் புழுவும்
வெடித்தது ஒன்று
காளை முகம் கொண்டு
நகைத்தது நரியின்
திறத்தில் தன்னிலை
தான் அழித்து
நிமிர்ந்தது மந்தியாய்
சதியும் புனைந்து
சிங்கத்தின் பிடரிபெற்று
ஓலமிட்டது கடுவன்
குரலில் கூவென்று
வாலில் நஞ்சும்
பொழிந்து அனலாய்
இச்சை கொள்ளா
மகளின் சேவகத்தில்
நன்றல்லது நன்றாய்
நயமுடன் பயக்கும்
ஆவென் உள்ளம்

Sunday, December 2, 2012

கொடுவரி


செவியில் ஓர் வரி
வளைந்து
நுதலில் மறுவரி
சேர்ந்து
ஒலிகேட்டு உயர்த்த
ஓர் வரி இட்டு
கழுத்தில் மூவரி
இணைந்து
புஜமும் பலவரி
கொண்டு
கால்களில் குறுவரி
கோர்த்து
வாலும் நீள்வரி
சுழற்றி
கண்ணும் துளைக்க
கூர்வேலுமாய்
வெகுளி காண் பெருக்கத்தில்
பாய்ந்து
இரைதேடி
கானகத்து நீர்வரியில்