Sunday, December 21, 2014

வெப்பம் சூழ்ஆழம்

கோளத்தின் உரு
பெருவெப்பம் சூழ்ஆழம்
தனிக்குவியம் எரியும்
நீர்மத்தின் கலவை
குணம் கூடி வழிய
திசை ஏதும் இன்றி
பரவும் திரவமாய்
குகையின் வழி துளை
கொண்டு பறக்க
வான் கடந்து வகை
பெற்று மீண்டு நீள
அந்தமில் லோகம் என
இடம் முற்றாக
ஆதியின் காலமாய்
விசும்பு வருடும் வளி
போற்றும் நெறியாக
அலை மூலம் தெளிவித்து
தொலை நிகழ் புரிவதாய்
கூர்ந்து வியங்குறு
வழியும் கூறாய்
இணைந்து பயில

Sunday, December 14, 2014

இசை எல்லை எனும் ஆக்கம்

நேசத்தில் குருவிகளின் கீச்சொலி
ஏட்டில் ஒலிப்பதாய்க் கேட்க
சின்னக் கிள்ளைகளாய் மிழற்றும்
இசையும் அறியாத ஓசையென
கானமாய்ப் பதிந்திருக்க
வனம் கொள் மாதும்
மாயப் பறவையின் நிறம்
ஒன்றைப் பாடி நிற்க
துயர் எனும் குரலாய்
காவியத்தில் சங்கமிக்கும்
மென்மைதனை செப்பி
கின்னரகீதம் பொழியும்
பெயர் அறியா புனைவுப் பட்சி
எனவே புலம்பும் பாவின்
சங்கீதச் சருக்கம் நகும்
புள்ளின் கனவது எனும்
கவியின் பேரெல்லை
கண்டும் கேட்டும் உண்டும்
உயிர்த்தும் உற்றறிந்தும்
செவ்வனே விட்டுவிடுதலையாகி
அடைக்கலமாகுமோ இயல்பின்
பாற்பட்ட ஆக்கத்தில்

Sunday, December 7, 2014

பதம் விளைந்த கவி

சொல் உண்டு
ஊண் எழுதி
எயிற்றின் கடையில்
தான் எனச் சிக்கி
விரல் ஊடாய் ஒளியும்
பிரித்தது நீர்மமோ நிறமோ
குருதி கனத்து வழிய
பதிந்தது சுவடியில்
எண்ணாயிரம் எழுத்தாயிரம்
கண்ணும் மயக்கி
உருவென கொண்டு
திணைசார் விருந்தாய்
திகட்டா அலகுடன்
தூற்றா பொருளில்
வேட்டலம் பாய
தறிவிடுத்து கோர்வையில்
நிலைமாறி விதந்து
வினைமேவும் காலை
சுயமும் மோகித்து
சுகமாய் பாவித்து
பேச்சும் இன்றி
முழு சிந்தையும் பயின்று
உறியப் பெற்றது
சக்கையினும் கீழாய்
சரிந்திட்ட பதமென
காணும் ஓர் கவியில்

Sunday, November 30, 2014

வனம் சிலிர்க்கும்

கூர்வேனில் குத்தும் தணல்
வெண்மதி தொடரும் பின்னந்தி
முகில் நிழல் மறைக்கும் பாதை
செவ்வண்டு இசை ஒலிக்கும்
பாதை துவளும் கொடியும் நுடங்கி
இலையும் உதிர்ந்து சலசலக்க
முயல் துள்ளி மரம் புகும்
கோண்மா நதி பாய்ந்து தளர
மின்னலென ஒளிரும் அணங்காய்
கிளை தாவி கூவென கூவ
அதிரும் பட்சியும் அடங்கி குமுற
சில்லென்னும் வளியும் பெயர
கானமும் செவியுறாது முடங்க
அடர் வலி போக்குமோ ஆரிருள் தனித்து

Sunday, November 23, 2014

உயிர் நிகழும் பருவம்

முற்றத்து நெடிதுயர்ந்து
கிளை பரப்பி நீள
செம்மலர் வளர் பருவம்
நகைத்து முரணாக்கி
தளிர் இலை சொறிந்து
விடுதலை யுணர்த்தி
செப்பும் அலையில்
வளி மீதுலாவி
இடர் அறிந்து
அகத்தின் வாசம்
மெல்லியதாய் பகிர்ந்து
இளம் முறுவல் அறிய
முகம் யாதென்று
காணா வளைவில்
படிந்தது குணம்
பச்சையின் இயல்பாய்
இரவில் செழித்து
ஒளியில் செறிந்து
எண்கோடி அணுவும்
மண் பிரிந்த நீராய்
வேரின் பிடிப்பில்
நிலைத்திருப்பதாய்
நகரும் கனவும்
உய்விப்பதாய்
அடரும் கானகம்
விருப்பின் புள்ளியாய்
வான் மறைத்து
இருளின் துணையுற்று
முளைத்த கணம்
இதுவென் திளைக்க

ஏட்டில் விளைந்ததாய் கனிந்ததாய் வர்ணிக்கும் இவ்வுயிர் நிகழும் தருணம் யாவிலும் நிறையும் என பரிணமிக்க.

Monday, November 3, 2014

புள்ளின் அசைவு

மண்ணில் புதைந்த
சிரத்தை மீட்டு
வானின் மையத்தை
தேடும் அலகுடன்
சிறுமென் நடைநடந்து
துள்ளும் மீனைக்கவ்வி
இயல்பென் ஆக்கத்தில்
தம்மையும் இணைத்து
மேகத்தின் அசைவதனை
மெய்யில் ஏற்றி
தன்னில் பிரிந்த
தனதின் நிழலும்
விசும்பில் படிந்ததாய்
வினை பயின்று
தானும் தன் பிம்பமும்
பரிமாண வெளியில்
அலையும் பேற்றினை
வடிப்பதனை பாவை
இயற்றும் திறம்யாதென
புள்ளின் மொழியில்
பெயர்த்து புகல்வதும்
பொருளின் சான்று
எனவே கிளைத்து
வரித்தது இங்கண்

Sunday, October 26, 2014

உம் எனும் ஓசைத்துளி

ஓர் பொருள் ஓர் நிறை
பாவின் உள்ளில்
ஊற்றெடுக்கும்
கவியின் கலி

ஓர்மையில் சிரத்தையும்
மேலாய் கீழாய்
இடமாய் வலமாய்
அசைத்தும் நகர்த்தும்
சொல் விளையாட்டு
என குறுக

உறக்கமும் மேவிடாது
இரையும் ஆட்டுவித்து
கிடக்கை அறிவிக்கும்
பூனையின் மெல்லொலி

சிறு பூவும் மலர
மகரந்த விதியின்
செறித்தலோடு ரீங்கரிக்கும்
மென்பொன் வண்டாய்
உருவகித்து

சலிக்கும் பொருண்மை
யாவும் சலித்து
மரபின் உசாப்பு
தவிர்த்து இலங்கி
இங்கு அளபெடையில்
வரிந்திருக்கும் ஓசைத்துளி

Monday, October 6, 2014

நீதியின் செலவாய்...

சருமத்து மீட்டிய
சுகித்து முயங்கும்
கருவியின் சிணுங்கலில்
எதிர் முனை குவியும்
தன் நயப்பை வழிய
உறியும் எண்கணித
வாய்ப்பாடும் தடைபட
கேளலும் களிப்பாய்
சொன்மையும் உள்சுழிப்பாய்
இன்கண் என்றே ஒலித்து
ஆட்டம் துவங்கி
உச்சத்தின் இறுதிவரை
சொப்பன உயவில்
உள்ளின் உள்ளில்
மானத்தை மீட்காத
வலியின் நுகர்சாயல்
ரூபத்தின் பிளவதனை
தவிர்த்து விலக்கி
பொய்யன்ன புனையும்
போகச் சருக்கம்
நீதியின் செலவாய்
தீர்த்தலில் மிகும்

Sunday, September 21, 2014

பயணித்து...

நீள்கோடாக நீண்ட
வெண் புள்ளிகள்
இணைகையில்
இரு ஞாயிறும்
சில கிரகங்களுமாய்
ஒரு குடைவிரிந்த செடி என
உணர் பொருள் மறுத்த
எந்திரத்தின் இயக்கமாய்
அகப்பேச்சின் சாரத்தில்
ஒளிப்பயணம் பூண்டு
சங்கிலித் துளையில் புகுந்து
யாச்சொல் அணைத்து
ஆயுதமும் கூட்டாய்
இறுதியின் உள்ளில்
காணும் அறிவதன்
புலனை மறைத்து
நனவும் துவண்டு
ஒற்றை எழுத்தின்
மடிப்புடன் தொடங்கி
பெயரிட்ட இழிவின்
வசப்பட்ட ஞானமாய்
காலமும் நின்று
பின் பயணித்து
புவியின் மையம் குவிய
ஈர்ப்பை மாற்றி
திசையும் பிறழ
வடிந்தன புலவின்
மீக்கூறும் வினையாவும்
வளைந்தது வேற்றின்
உருவமாய் ஒரு கூற்றம்

Sunday, September 14, 2014

குமிழி

குமிழியும் பறக்க இடைவிடாது
வளியின் வழியில் தொடர
உள்ளும் புறமும் நிரம்பிய காற்று
நீரைச் சுமந்து ஆவியின் துளியில்

நீர்மத்தில் மிதக்கும் குமிழியும்
வளி உட்கொண்டு சிறுகச்சிறுக பெருத்து
கண்ணின் உள்விழி என மாறி
உள் கவிந்து கலக்கும்

உமிழும் நீரில் ஓரு குமிழி
உள்ளின் சொல்லாய் கிளம்பி
வெளியின் வளியாய் உள்புகுந்து
உண்ணும் இன்மையின் பொருளென

Sunday, September 7, 2014

ஞாயிறும் பிறக்க

அருகா மருங்கில்
அவ்விரி அக்கதிர்
அச்சிறு அம்பலம்
அகலும்

இருள் ஒழியும்
இத்திற நிறத்தின்
இவ்வையகத்தில்
இருந்தவம்

உச்சியில் நிலவும்
உயிர் உருக்கும்
உவப்பில் சிவக்கும்
உரத்தில்

எழும் பகல்
எழும்நிறை
எருவாய்
எரியும்

ஐம்புனல் ஓதும்
ஐயங்காண்
ஐம்புவனத்து
ஐவனத்தில்

ஒளியின் ஓர் கீற்று
ஒற்றை வானில்
ஒருமை காண்
ஒருங்கண்

Sunday, August 31, 2014

நெறி வழி

பசுமை அடர் குழைவும்
உருவிச் சேரும்
இலையதில்

பொன்பூசி வளைந்ததில்
பதியும் வடிவாய்
மலரதில்

நீன்மை வளமார்ந்து
ஒழுகிப் பெருக
விசும்பதில்

அழலும் பொரிந்து
விடிந்து பரவ
ஞாயிறதில்

புகையும் கவிந்து
உள்ளில் கலக்க
இரவதில்

குளிரும் அடங்கும்
இதமும் பெயர்ந்து
புலமதில்

பவளம் நாண
பாயும் திறமாய்
குருதியதில்

நுரையாய் மிதக்கும்
சகலமும் பெருகிய
மதியதில்

சாம்பலும் துவரியும்
துகளாய்ச் சேரும்
நெறியதில்

Monday, August 25, 2014

வீணில் உடல்

தோயும் உடல்
தனித்தென பிரிய
ஆர்ப்பரிக்கும் சுழிப்பு
சுற்றும் வட்டமாய்
நீரும் குருதியும் கலந்து
நீர்த்தலாய் வழிய
ஓர்மையும் சரிதமும்
பிணங்கிக் கூட
பிளவுற்ற புலன்
நிரக்கமாய் சமைய
இடையில் ஊடாடும்
மூதின் பருவம் என
கடக்க மறுத்து
துடிப்பில் சில்லென்
சிலிர்ப்பும் வடிந்து
பெயர்த்துச் சிதறிய
இரு கூறென கண்டு
கவின் கரைந்து
இளகும் நிணமென
பிம்பமும் பொலிய
நகைப்பின் சித்திரமாய்
கோரச் செண்டும்
இதழ் பிய்ந்து குதற
ஞானம் செப்பும் சிமிழாய்
துலங்கும் வீணில்

Sunday, July 27, 2014

யாமற்றது

எம்மை ஞாலத்தின் மீதமர்த்தி
வரித்துச் செப்பிய உருக்கோளமாய்
மையத்து தொகுப்பிலும் மிதந்து
உணர் இழை நீண்டு அண்டம் சுருட்ட
உலகு தாங்கிய பாரம் காணாது
அரற்றும் ஆங்கொருவன் மிரண்டு
பால்வெளியும் கடந்து ஒளியும்
பீறிட்ட சிறுதுளை வழி பயணித்து
பாதம் எட்டும் மீனில் பதிந்து
விண்வரைவாய் வேகம் கொண்டு
கதிர் தாண்டி சூளும் துகள் மீண்டு
பல் சராசரங்கள் உள் கவர்ந்து
பருமளவின் பரிமாணத்தகலத்து
பரவி பெருகி விரிந்து அகண்டு
பற்றிழையில் யாம் கரைந்தும்
நிரப்புவித்தும் நிறைந்தும் நிலாவியும்
ஒர் குமிழில் அடைபட்டு பிளவுற்றும்
எம்மில் இருமையாய் பன்மையாய் விளைய
                           பிறக்கும் எழுத்தும்
தோன்றும் எண்ணும்
அறியாத இயலின்
அடையாளதிதல் ஒன்றாய்
வேறாய் பலதாய்
எம்மை வனைந்து
எம்மை புனைந்து
யாம் மறைந்த பிறிதின்
திரிபுற்று பொருள்
வழியை நவில்ந்து
  தொடர் பெயர் சுட்டும்
கோர்த்து விதியும்
எச்சமாய் வகுத்து
வினையும் செயல்பட
அறிந்திரா நன்மொழியில்
யாம் வடிந்திட
                          எம்முள் அந்நியமாய்
ஒதுங்கும் யார்
இச்சொல் நிகண்டை
தருக்கிச் சேர்ப்பது
என துருவத்தின் முனையிலும்
புரளும் காலத்தின் முடிவிலும்
வினாவ எம்மில்
காணா விடையும்
எம்மின் பதிலியாய்
  முதிரும் யாமற்றது

Sunday, July 20, 2014

அன்றியும் பரிமாணம் நிகர்த்து

யாதொரு பிம்பம் என்றே
ஆய்ந்ததில் முப்பரிமாண
அடையாள பிரதிமை
எனவும் இடமாற்ற
வியாபிப்பில் பரிமளிப்பது
எனவே தெருள
தன்முன் பிறிது எனும்
பொருள் கணச் சேர்க்கையில்
வியாசம் வழுவ அலகாக
அயல் நிகர் அப்பால் நிகழ்
வெளிச் செருகல் எதுவும்
சிறுதுகள் வேதிக் கலப்பில்
இயல்வதாய் பண்புற
இகத்திலும் பரத்திலும்
மெய் இயற்றும் புனைவாய்
கமழும் கூடின் வசம்
திகையும் கற்றையின்
பான்மை திளைக்கும்
இருப்பென்றும் இன்மையென்றும்
தலைகீழ் விகிதமாய் எடைகூடி
அணுவின் பிளவில் மொய்ம்புற்று
தேகமாய் பின்னலாய் கொடியாய்
பிரிவதுவும் இணைவதுவும்
இன்னினது பெயர் வரையா
புலன் பாவிக்கும் புலம்

Sunday, May 25, 2014

சாரியை வாசகங்கள்

அள்ளெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:

சேர்தலும் விலக்கும் இரங்கலும்
நல்லிழைதலும் என்றே கூடி
ஒருங்கு குவித்த எம் நிலை
தவிப்பில் வாடி சுருங்கும் காயமாய்
புரிந்திட்ட ஒழுங்கென இயைபென்றானதுவே

அன்னெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:

வண்ணத்துப் பூச்சியாய் பறந்து
கண்ணிலும் அகத்திலும் ஆடி எம்
துயர்காணாது தன் விருப்பில் சுமை
கொண்டே விதிரும் சிற்றுயிராய்
சிறகசைத்து திணையாகும் எனவே விதிக்க

அள் ஈராய் மறுவாசகம்:

கரைந்தனள் புலம்பினள் விழிபெருக்கினள்
எனும் காட்சியாய் ஏட்டில் பதியும்
பாவை அன்ன திரியும் உடம்போடு
எவ்விலங்கும் ஈனும் உணர்வினதாய்
விடுத்து புலன் விளக்கும் புதுநெறி பாற்பட்டே

அன் ஈராய் மறுவாசகம்:

எதிர்த்தனன் விதித்தனன் சூடினன்
என்று வர்ணிக்கும் பொருளில்
விரிந்த வடிவாய் ஏற்ற
உறுதியோடு திறம்பட்ட புனைவென
அலையும் மெய்யாய் ஏந்திய இவ்வண்ணம்

அள் ஈராய் ஒரு வாசகம்:

தொடர்புற்றனள் அலையாய் தன்
வடிவும் உருமாற்றி மனமும் விழியாய்
புள்ளியில் கோர்த்து செரிக்கும்
பல்வினை தாண்டி வலி கூட்டி
வளி அடைந்த வானமாய்

அன் ஈராய் மேல் வாசகம்:

குழவி போல் நீரில் அலையும் ஒரு
பயனும் காணாமல் நீந்தி தவிக்கும்
இருப்பில் கடனாய் நின்ற ஒலியாகி
சர்வமும் சரண்டையப் பணியும்
சீவனாய் ஆனதேனோ

Sunday, May 11, 2014

தகிக்கும்...

நீரில் மறைந்தது பிறை
வளைந்தது நெளிந்தது
ஆடியின் உயிராய்
தகித்தது
வான் கரைந்தது நீர்மமாய்
ஒளித் துண்டு உதிர்த்து
கருத்தது கலைய
வளியும் அசைத்தது
அலையை சுழித்தது
வட்டமாய்ப் பெருக்கி
நிலவைத் தொட்டும்
அண்டாமலும்
உயரத்து சிமிட்டும்
ஆழத்து உருகும்
திங்களின் உடல்
எட்டி நின்று
காயும் தண்ணென்று

Sunday, April 20, 2014

சித்திரம் தாங்கி

புலன் வகையும்
உரு வடிவும்
இருப்பும் தருணமும்
உள்மூச்சின் நிறமும்
வேதியியக்கம் அனைத்தும்
செலுத்தி அண்டத்தில் பரவ

நிகழ்ந்தது ஒளிரூப சேதியில்
படிந்தது ஞாலத்தின் வெளியில்

வயலும் நகர்ந்தது
தண்டும் சுழல
பயிரும் வளைந்து
சித்திரமாய் பெருவரைவில்
உணர்ந்திட்ட பொருளாய்

பொறி என சிறுத்து
உள்கிடக்கும் சோதியை
கிளரும் எழுச்சியாய்
அகரும் புறமும் ஒன்றாகி
விண்மீனும் கோளும்
தாங்கி செறித்து
நனவின் குழைவில்
வழிந்து பயணித்து
அலையும் கோடாய்
அசையும் இயல்பாய்
மருளும் பொற்பும்
விசித்திர கோர்வையின்
வினைமுற்றும் கொள்வதாகி
வான் எனவும் அடி உலகாகவும்
பிரிந்தறியா புதுசமனில்
பெயரும் சுட்டாது
அவதாரக் கனியில்

Sunday, March 2, 2014

கேளா பாடல்

பச்சை வாசம் படர்ந்தாங்கு
குளிர் கடுக்கும் மேகத் துணுக்கின்
ஊடே பெருகும் ஓசை ஒன்று
இனிமையும் தனிமையும் ஒருங்கே
சமைந்த அருவியின் கொட்டுதலாய்
இலைகளின் இடுக்கில் நுழைந்து
பழச்சோலைகளில் பதுங்கிப் பரந்து
தெவிட்டா கானமாய் தொலைவில்
ஒலிக்கும் தேமதுரத் தெள்ளமுதாய்
மேலேறும் உச்சம் வான் உயரம்
வளியில் பூக்கும் கோலமென
கீழிறங்கும் சரளம் நீரின் தண்மையன்ன
சலசலத்து சுழிக்கும் நதியாய்
வனம் நிரம்பும் குறிப்போடு
வர்ணத்தின் ஜாலமாய் சுகமதில்
இணைந்து துயில் கொள்ளும் செவியினில்
கேளா பாடல் குவிமதி இசையாக

Sunday, February 23, 2014

நிகரின்மை

சிரம் பிளக்க வலி உடைத்து
உறவும் சிதறி துண்டாக
அன் எனவும் அள் எனவும்
பிரிந்து நிகராகா முயக்கத்தில்
இருமையும் சேரும் புள்ளி
இணையற்று கூடிக் குறைய
ஓர் குறி மாறி மறுபிறப்பும்
அணிந்து உலவா சதுக்கத்தில்
கானமும் மறைந்து குருதி தெறிக்கும்
சூத்திரம் பாய அணையா
வெள்ளமன்ன பெருகி துயர் என
விரிந்து உயவுக் கடலில்
நடமிட முகைந்து பறக்கும்
கழுகாய் சிறகொடிந்து மீனின்
இரை புகும் கொள்வாய்
சேதம் காணும் அகம் புகலும்
கனத்து ஒறுக்கும் புலன் பரிவை

Sunday, February 9, 2014

ஓர் பொறி நகும்

பொறி இயங்கும்
ஆரம் பலதாய்
வட்டுச் சுருக்கம்
ஓடும் நிழற்பாதை
குவிவது போன்மை
விலகும் பான்மை
எண் கணிக்கும்
பார்த்தலற்ற விழி
பழகியது வடிவம்
இருள் சேர்க்க
ஒளி பிளக்க
தீதாய் மாறிய
திரை மயக்கம்
உணர் சித்திர
மறைவதில் கலந்து
நகும் வேள்வி
வரம் என்று
காட்டி அல்லதை
ஓம்பி செயல்
பகுக்கக் காணும்
ஓர் இடர் புகுந்து
பெருவலி சுகித்து
அற்றது வரின்

Sunday, January 26, 2014

வயங்கும் பருவங்கள்

பவளப் பருவம்

வேனில் முற்றும் காயாய் பூத்தது
கனியாய் முதிரும் சுகமாய் விளைந்தது
செங்குருதி முத்தாய் சமைந்ததில்
கானும் சடங்காய் அமைந்தது

அந்தருவப் பருவம்

பூஜ்யத்து நித்திரை கோசம் பெருக
தபசும் அனுபோத மருவத்தில் கோர்த்து
புகவிளங்க பூஜை ஆயும் மந்திரத்தில்
உன்னத பொற்பலமும் இலங்குவதில்

உணர் பருவம்

பாக்கியமும் மலர்ந்த ரோகணத்தில்
பையுள் முகிழும் திரண்ட யுகத்தில்
சர்ப்பம் விரையும் கமலச் செண்டில்
சரசமாடா பஞ்ச லோகத்து

புனர் பருவம்

மஜ்ஜை கலையும் கோண் முகில்
உற்பவித்த தாழ்பதி மண்டிலம்
மாச்சரியம் சூழ் மேவுலகு பண்பட்டு
விகற்பமும் தாண்டி லயத்தின் சொப்பனமாய்

புதை பருவம்

கூர்மம் புனைந்த பெருவெளி கோளம்
மன்னும் மீனும் இந்திர விஜயத்தில்
தயை துவர்ந்து தரங்கம் அதிர
வேணுவும் கானமாய் முரலும் வாக்கில்


மந்திரச்சிமிழ், ஆகஸ்ட் 2013- ஜூலை 2014 இதழில் வெளியான கவிதை.

Thursday, January 9, 2014

அகம் மற்றும் ஒரு முகம்

வளைந்தன கோடுகள்
முனை உரசி சரிய
மேலும் உயர்ந்து சரிந்து
கீழும் வீழ்ந்து நுடங்கி
வட்டமோ ஆரமோ
வில்லும் அல்லாமல்
கொடியும் போலே
விழியும் நேராய்
நிமிர்ந்த செருக்காய் நாசியும்
சற்றும் குவிந்து
இரு பிறை நெளிவென
இதழ்களும் பிரிந்து
இறுகும் கன்னம் தழைய
அகலும் நுதலும்
அடர் கூந்தல் கலைய
ஆடியின் பிம்பமாய்
சுடர் பொலிந்த முகமும்
சித்திரத்தில் வேறாய்
மெய்யென மறைத்து
மற்றை யாதொரு
அகத்தில் துலங்கிடவே