Sunday, August 31, 2014

நெறி வழி

பசுமை அடர் குழைவும்
உருவிச் சேரும்
இலையதில்

பொன்பூசி வளைந்ததில்
பதியும் வடிவாய்
மலரதில்

நீன்மை வளமார்ந்து
ஒழுகிப் பெருக
விசும்பதில்

அழலும் பொரிந்து
விடிந்து பரவ
ஞாயிறதில்

புகையும் கவிந்து
உள்ளில் கலக்க
இரவதில்

குளிரும் அடங்கும்
இதமும் பெயர்ந்து
புலமதில்

பவளம் நாண
பாயும் திறமாய்
குருதியதில்

நுரையாய் மிதக்கும்
சகலமும் பெருகிய
மதியதில்

சாம்பலும் துவரியும்
துகளாய்ச் சேரும்
நெறியதில்

Monday, August 25, 2014

வீணில் உடல்

தோயும் உடல்
தனித்தென பிரிய
ஆர்ப்பரிக்கும் சுழிப்பு
சுற்றும் வட்டமாய்
நீரும் குருதியும் கலந்து
நீர்த்தலாய் வழிய
ஓர்மையும் சரிதமும்
பிணங்கிக் கூட
பிளவுற்ற புலன்
நிரக்கமாய் சமைய
இடையில் ஊடாடும்
மூதின் பருவம் என
கடக்க மறுத்து
துடிப்பில் சில்லென்
சிலிர்ப்பும் வடிந்து
பெயர்த்துச் சிதறிய
இரு கூறென கண்டு
கவின் கரைந்து
இளகும் நிணமென
பிம்பமும் பொலிய
நகைப்பின் சித்திரமாய்
கோரச் செண்டும்
இதழ் பிய்ந்து குதற
ஞானம் செப்பும் சிமிழாய்
துலங்கும் வீணில்

Sunday, July 27, 2014

யாமற்றது

எம்மை ஞாலத்தின் மீதமர்த்தி
வரித்துச் செப்பிய உருக்கோளமாய்
மையத்து தொகுப்பிலும் மிதந்து
உணர் இழை நீண்டு அண்டம் சுருட்ட
உலகு தாங்கிய பாரம் காணாது
அரற்றும் ஆங்கொருவன் மிரண்டு
பால்வெளியும் கடந்து ஒளியும்
பீறிட்ட சிறுதுளை வழி பயணித்து
பாதம் எட்டும் மீனில் பதிந்து
விண்வரைவாய் வேகம் கொண்டு
கதிர் தாண்டி சூளும் துகள் மீண்டு
பல் சராசரங்கள் உள் கவர்ந்து
பருமளவின் பரிமாணத்தகலத்து
பரவி பெருகி விரிந்து அகண்டு
பற்றிழையில் யாம் கரைந்தும்
நிரப்புவித்தும் நிறைந்தும் நிலாவியும்
ஒர் குமிழில் அடைபட்டு பிளவுற்றும்
எம்மில் இருமையாய் பன்மையாய் விளைய
                           பிறக்கும் எழுத்தும்
தோன்றும் எண்ணும்
அறியாத இயலின்
அடையாளதிதல் ஒன்றாய்
வேறாய் பலதாய்
எம்மை வனைந்து
எம்மை புனைந்து
யாம் மறைந்த பிறிதின்
திரிபுற்று பொருள்
வழியை நவில்ந்து
  தொடர் பெயர் சுட்டும்
கோர்த்து விதியும்
எச்சமாய் வகுத்து
வினையும் செயல்பட
அறிந்திரா நன்மொழியில்
யாம் வடிந்திட
                          எம்முள் அந்நியமாய்
ஒதுங்கும் யார்
இச்சொல் நிகண்டை
தருக்கிச் சேர்ப்பது
என துருவத்தின் முனையிலும்
புரளும் காலத்தின் முடிவிலும்
வினாவ எம்மில்
காணா விடையும்
எம்மின் பதிலியாய்
  முதிரும் யாமற்றது

Sunday, July 20, 2014

அன்றியும் பரிமாணம் நிகர்த்து

யாதொரு பிம்பம் என்றே
ஆய்ந்ததில் முப்பரிமாண
அடையாள பிரதிமை
எனவும் இடமாற்ற
வியாபிப்பில் பரிமளிப்பது
எனவே தெருள
தன்முன் பிறிது எனும்
பொருள் கணச் சேர்க்கையில்
வியாசம் வழுவ அலகாக
அயல் நிகர் அப்பால் நிகழ்
வெளிச் செருகல் எதுவும்
சிறுதுகள் வேதிக் கலப்பில்
இயல்வதாய் பண்புற
இகத்திலும் பரத்திலும்
மெய் இயற்றும் புனைவாய்
கமழும் கூடின் வசம்
திகையும் கற்றையின்
பான்மை திளைக்கும்
இருப்பென்றும் இன்மையென்றும்
தலைகீழ் விகிதமாய் எடைகூடி
அணுவின் பிளவில் மொய்ம்புற்று
தேகமாய் பின்னலாய் கொடியாய்
பிரிவதுவும் இணைவதுவும்
இன்னினது பெயர் வரையா
புலன் பாவிக்கும் புலம்

Sunday, May 25, 2014

சாரியை வாசகங்கள்

அள்ளெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:

சேர்தலும் விலக்கும் இரங்கலும்
நல்லிழைதலும் என்றே கூடி
ஒருங்கு குவித்த எம் நிலை
தவிப்பில் வாடி சுருங்கும் காயமாய்
புரிந்திட்ட ஒழுங்கென இயைபென்றானதுவே

அன்னெனும் சாரியை ஈராய் வந்த வாசகம்:

வண்ணத்துப் பூச்சியாய் பறந்து
கண்ணிலும் அகத்திலும் ஆடி எம்
துயர்காணாது தன் விருப்பில் சுமை
கொண்டே விதிரும் சிற்றுயிராய்
சிறகசைத்து திணையாகும் எனவே விதிக்க

அள் ஈராய் மறுவாசகம்:

கரைந்தனள் புலம்பினள் விழிபெருக்கினள்
எனும் காட்சியாய் ஏட்டில் பதியும்
பாவை அன்ன திரியும் உடம்போடு
எவ்விலங்கும் ஈனும் உணர்வினதாய்
விடுத்து புலன் விளக்கும் புதுநெறி பாற்பட்டே

அன் ஈராய் மறுவாசகம்:

எதிர்த்தனன் விதித்தனன் சூடினன்
என்று வர்ணிக்கும் பொருளில்
விரிந்த வடிவாய் ஏற்ற
உறுதியோடு திறம்பட்ட புனைவென
அலையும் மெய்யாய் ஏந்திய இவ்வண்ணம்

அள் ஈராய் ஒரு வாசகம்:

தொடர்புற்றனள் அலையாய் தன்
வடிவும் உருமாற்றி மனமும் விழியாய்
புள்ளியில் கோர்த்து செரிக்கும்
பல்வினை தாண்டி வலி கூட்டி
வளி அடைந்த வானமாய்

அன் ஈராய் மேல் வாசகம்:

குழவி போல் நீரில் அலையும் ஒரு
பயனும் காணாமல் நீந்தி தவிக்கும்
இருப்பில் கடனாய் நின்ற ஒலியாகி
சர்வமும் சரண்டையப் பணியும்
சீவனாய் ஆனதேனோ

Sunday, May 11, 2014

தகிக்கும்...

நீரில் மறைந்தது பிறை
வளைந்தது நெளிந்தது
ஆடியின் உயிராய்
தகித்தது
வான் கரைந்தது நீர்மமாய்
ஒளித் துண்டு உதிர்த்து
கருத்தது கலைய
வளியும் அசைத்தது
அலையை சுழித்தது
வட்டமாய்ப் பெருக்கி
நிலவைத் தொட்டும்
அண்டாமலும்
உயரத்து சிமிட்டும்
ஆழத்து உருகும்
திங்களின் உடல்
எட்டி நின்று
காயும் தண்ணென்று

Sunday, April 20, 2014

சித்திரம் தாங்கி

புலன் வகையும்
உரு வடிவும்
இருப்பும் தருணமும்
உள்மூச்சின் நிறமும்
வேதியியக்கம் அனைத்தும்
செலுத்தி அண்டத்தில் பரவ

நிகழ்ந்தது ஒளிரூப சேதியில்
படிந்தது ஞாலத்தின் வெளியில்

வயலும் நகர்ந்தது
தண்டும் சுழல
பயிரும் வளைந்து
சித்திரமாய் பெருவரைவில்
உணர்ந்திட்ட பொருளாய்

பொறி என சிறுத்து
உள்கிடக்கும் சோதியை
கிளரும் எழுச்சியாய்
அகரும் புறமும் ஒன்றாகி
விண்மீனும் கோளும்
தாங்கி செறித்து
நனவின் குழைவில்
வழிந்து பயணித்து
அலையும் கோடாய்
அசையும் இயல்பாய்
மருளும் பொற்பும்
விசித்திர கோர்வையின்
வினைமுற்றும் கொள்வதாகி
வான் எனவும் அடி உலகாகவும்
பிரிந்தறியா புதுசமனில்
பெயரும் சுட்டாது
அவதாரக் கனியில்