Sunday, April 5, 2015

துயர் அலை

இளஞ்சிவப்பு மொட்டும் விரிய
துயர் அலை பரப்பி புதரில் கவிழ
இணை மகிழ் தாவரத்தின் முளைப்பில்
துதி தேடி வளரும் செம்மலர் பூக்க
முள்ளின் முடிவிலா கூரில்
கிளைத்த காதை மதி மயக்கும் என
விருத்தத் தொடரில் ஈட்டி சேமித்து
பித்தின் களியில் புகுத்தி ஏமுற
குருதிச் சிவந்த பூவின் கிளையும்
வரும் விசித்திர கோண்மையின் நிழலாய்
மறக்கும் விழைவில் விடுப்புற்று
பேசிய செடியின் ஒலியைக்
கோர்த்து அசையும் இட்டு நிரப்பி
பிரிவுள் கூடி மடிந்த ஓர்மை
இழை பிரிந்து தோதாகி ஓத
பிராயம் கனிந்து வளர்பெறும்
கூடின் பூடாய் தரித்து முதிர

Sunday, March 29, 2015

இருப்பென்னும் இன்மை

இருப்பென்றும்
இன்மையென்றும்
இருப்பாகி நின்று
இன்மை யனைய
இருப்பில் நிகர
இன்மையும் பகர்ந்து
இருப்பும் இலங்க
இன்மையில் பதிந்து
இருப்பை ஈர்க்க
இன்மை யச்சம்
இருப்பில் கரைந்து
இன்மை சார்பில்
இருப்பென்னும் இன்னதும்
இன்மையின் உன்னதம்
இருப்பை நவில
இன்மை வலிந்து
இருப்பில் உளதும்
இன்மையில் சிலதாய்
இருப்பைக் கலந்து
இன்மையில் கழிந்து
இருப்பின் முதுமை
இன்மையில் கனிய
இருப்பின் களைப்பு
இன்மையில் முகிழ
இருப்பின்மை இயல

Monday, March 23, 2015

சிறு மென் உலாவல்

குழறும் நாவில் மிழற்றும் பதங்கள்
வண்ணக் குவியல் பொதிந்த பளிங்குத்
தாழியினுள் முரலும் வண்டும்
சுவற்றில் மோதி ஒலி எழுப்ப
தனித்து பயணிக்கும் செம்மகள்
நீலக்கண்ணால் ஒளியை உமிழ
ஆழியின் அடியில் வெண்மணல்
நலிய பறக்கும் வட்டின் விசை
இசையில் ரீங்கரித்து நீள்கூந்தல்
உருவொன்று இடைப்பட
வெறியும் களியும் புகுந்தாட்ட
கனிவின்றி மிரளும் சிறுபேதை
கருமலர் பறித்து வீசும் கணம்
அருவம் பாய்ந்து குழல் பற்றி
இடியின் பேரரவத்தில் கூவ
அச்சம் உதிர்ந்து சாந்தமும்கூடி
நவமையப் புள்ளிகளில் தூண்டி
கரையும் மின்னலாய் நகர்ந்து
காந்தப் புலமும் சுருளும் பாதையில்
ஒற்றும் உலாவி சோதி பெருக்கி
நீரில் அலை சுழற்றி கவசத்தில் நின்று
புல்லும் ஆதியாய் விகாரமும் ஈறாய்
பல் வடிவப் புடை பெயர்வில்
சிறுமென் பகையும் தவறி வீழ
முளைத்த பிறப்பு யாவும் தொடர் அலர்தலில்

Sunday, March 15, 2015

புலன் மருவி

நுட்பச் செதில்
செவி மருவி
ஒலித்துகள் காண
கூர் விழியும்
குழையாய் விளங்க
ஓசையும் பார்வையும்
முயங்கி விரவ
கேளலும் காணலும்
இணங்கி இணைய
முப்புலம் ஒருங்கே
உள் ஆழம் புனைந்து
அகத்தின் புலனாய்
நீளும் வீணில்
சருகின் உயிராய்
கூம்பும் காதும்
கண் எனச் சிறுத்து

Sunday, March 1, 2015

விதியாய் நினைவும்

நிகர் சமன் பெற்றிருக்க
பல்லாயிரம் கிளவியும்
இச்சூத்திரம் கொண்டதறிந்து
புலன்சார் புவியின்
அழுத்தம் மேல் மிகத் தணிய
உயிர் மிகச் சேர்ந்து
மெய் மிக பாரித்து
எச்சம் எனவும் முற்று எனவும்
விதி வகுத்தும் பகுத்தும் கோர்த்தும்
விரிக்கின் வரி நீளும் ஒலிப்படுத்தி
உவர்ப்பதாங்கு ஒளியின் தூரிகையில்
மீட்டும் துறையின் பான்மை
சொல் சருக்கம் புரிந்தமைந்து
வியங்கும் அளவையும் காலமிலதாய்
சமயம் அழியும் நிலவுதலில்
வழமை பாரா நியதியும்
நினைவும் ஓர்மையும் புகுந்து கூராக்க

Tuesday, February 24, 2015

பேருருவச் சித்திரம்

பெரும் பாதம் பதிய
மலை முகட்டு சிரத்தை
அசைத்து குனியும்
பல்லாயிரத்து உயிர்
கடுகு சிறுத்த உணவும்
உள்ளங்களை நீளலும்
காணாத அகல்வாய்
பிளந்து கல்உருளும்
ஓசையில் எயிறும் சேர
உறக்கம் கனிய
ஊர்ந்து சரிய
கருநிழல் அண்டத்தில் வீழ
பகுதியாய் உள்ளொளியில்
உருவும் விளக்கம் பெறாது
ஒற்றை நிமிரலில்
கிரகங்கள் தாண்ட
பாறை நகரும்
சாயை விளம்பும் மாயத்தில்

                       உகிர் ஒன்று மரமானதாய்
                       என்பும் உயர் கோபுரமாய்
                       தொகுக்கும் சான்றுகள்
                       திகிரியின் அடுக்கமாய்
                       பிழைத்தது எச்சமாய்
                       சுருங்கியது குணத்தினதாய்
                       அரவமும் பேச்சாய்
                       விடமும் சிந்தையாய்

Sunday, January 4, 2015

முள் நிறமிழந்து

முள்ளின் நிறமும்
மலரின் மணமும்
கோரிப் பெற்றன
மகிழ்வின் மணத்தை
நேசத்தின் குணத்தை
பரிவின் நுகர்வை
பெரும் ஒலிகொண்டு
மீட்டிட இனத்தின்
பான்மை சொல்லும்
பொருளில் அல்லாது
இனிமையில் நிகழ்ந்து
புலன் யாவும்
ஈர்த்ததாய் விளம்பி
மானத்தின் நுனியில்
அற்றமும் கவிழ்ந்து