Sunday, November 25, 2012

மீண்டும் எழும்


-தீபிகை தூண்டி கிளம்பிய சுடரில் எழுந்தது பெருநிழல்
-புகையாய் உருப்பெற்று பெரு வடிவெடுத்தது கூளி எனும் நெருப்பு
-உரும் எனும் ஓசை பெருக தகித்தது விசும்பு
-திடும் எனும் ஒலி கொண்டு வெடித்தது நிலன்

அச்சத்தால் குறுகும் பேதை புகை வெளியில் நீண்டு தன் விருப்பும் செப்பினளே

-உயிர்பேணும் ஐயம் வெறுமையாய் போக
-மூச்சும் நிறுத்தும் வேட்கை மடைமாற
-அவாவும் துன்பம் உறவின்றி நீள
-இச்சையும் இனி இவ்வுலகத்து நீக்கமுற

போரெதிர்ந்த வெளியில் இடியன்ன நகையாய் அதிர்ந்து தெய்வம் பற்றியதை கூற

-தசையும் கூழாய் வடியுமோ என்பின் உருவில் நிலைய
-காற்றும் வருடாது தணலும் வேகாது நீரும் தணியாது இருக்க
-அல்லதை நடாத்தி வினை செய்விக்க ஊடாடி
-ஆதியில் விளைந்த அரும்பழத்தை பிசையவே

பால்பொருள் திரிந்த உடல் பெற்று பிரதிமை கலையும் உயிர் கொண்டு துய்த்த மொழி

-பச்சையும் குலையுமோ கானகத்து
-புள்ளும் இணை மறக்குமோ
-மீண்டும் கல்லாய் சமையுமோ
-யுகம் பின் கடந்து வெடிப்பின் முன் சேருமோ

அருளும் தீதும் அறியா தொகை நிலை தன்னில் எழுத்தும் ஒலியும் இன்மையாய்

Sunday, October 28, 2012

விருப்பும் விட்டிலாய் பறக்க


வெள்ளி நீரோடும்
தூயநதியில் வீழ்ந்த
வெண்முல்லை சரமன்ன
அவள் அலையும்
கரையினில்

எயிற்றில் தன்னல பாரம்
கடித்து இழுத்து நகரும்
வேட்கை மன்னர்கள்
கடமையும் புறந்தள்ள
விருப்பும் அகங்கொள்ள
விட்டிலாய் பறக்க

பேதை கொள்ளும் கருணையே
இடரில் புதையும் அனலாய்
பாராமுகம் காட்ட
ஓலம் பெருக்கி ஈர்க்கும்
தன் மக்கள் தன் உடமை
ஓங்கும் பேரவா
பெண்ணும் காயமாய்
சிறுத்தாங்கு புகல

குறுநகையும் வெறுப்புற்று
வதியும் கொடுஞ்சினமும்
வருந்தாத ஆவின் தோலன்ன
புகழ்உடல் பெற்ற மறவர்

பூவும் சொறியும்
அமுதும் பெறா
பேராய் பெற்றிடினில்
இழுக்கும் விசையும்
இயைபற்று சுயம்மறைந்து
தேறாகனவினில் புலரும்
கணம்தனை மறந்து

Sunday, October 14, 2012

ஏட்டை விலக்கி


குருதி நிற விழிகள்
சிறுவட்ட சிரத்தில்
ஆடும் செவ்வண்ண கொண்டை
சுழிக்கும் அலகு
நீலச்சிதறலாய்
சிறு கழுத்து வளைய
இறகும் மெல்லிய
மழைக் கனவின்
வானவில்லாய் அசைய
மஞ்சள் கால் நகர
மூவ்வுலகப் பறவை
விரிந்தது விண்ணில்

குவளைக் கண்ணும் சிவக்க
சென்னியும் கோளமாய்
சிவந்த மலர்களாட
குவிந்தது இதழும்
குளிரும் தோளும்
மெல் நடுங்கி இணைய
தோகை சிறகும்
முகில் பூத்த
மலைமுகடாய் செறிய
பொன் பாதம் நடமிட
வேற்றுலக தேவதை
நிறைந்தது நிலத்தில்

ஈருயிரும் ஓருயிராய்
புனைவெழுதி குருவும்
நகை கொள்ள
ஏட்டை விலக்கி
பறந்தனவே
பறவையும் எழிலாளும்

Sunday, September 9, 2012

எம்மையும் உம்மையும்


உன்
ஒரு முகத்தின்
பாரா கணத்தில்
நிலைகொள்
இடும்பையோடு
பிரியும்
வளைவாய்
நெடுக
நீரின் நிறம்


என்
உரு அகத்தின்
புரியும் தருணத்தில்
அலையும்
களித்துயிலில்
சேரும்
பரப்பாய்
குறுக
குருதி வண்ணம்

நின்
சிறுபுறத்தின்
சிதறா காலத்தில்
கலையும்
உழந்து
கலப்புடன்
மையத்தில்
பொழியும் நிறமற்று

எம்
பெரு வெளியின்
குவிந்த பொழுதில்
இரங்கலில்
குழைவாய்
கிடையில்
விளிம்பில்
நாறி சாயமற்று

Sunday, September 2, 2012

தொடரல்


நீல வண்ணத்தி
தேன் கவர்ந்து
மலைமுகட்டில் உயரே
பறந்து படபடத்து
மகிழும் சேதி
கோர்க்க தருவின்
நிழல் கூடியமரத்து
பொன் வண்ண அரவும்
ஊறி மொட்டின்
வாசம் முகர
விடத்தின் காற்று
விரட்டியது சிற்றுயிரை
பூத்தேடி தளிர்நாடி
மெல்லிதழ் நடுங்க
நீலக்கமலம் புக
மலர் நுகர்ந்து
பேரின்பம் பெற்றிடவே
குளம் கண்டு
பாம்பும் தொடர
நீருள் மூழ்கி
தாமரை வேர்
பின்னி தளரும்
மூச்சை நிறுத்தி

Sunday, August 26, 2012

அகம் கொள் பொருள்


வண்ணத்தி நீள் பறந்து துடித்து
அமரும் ஆங்கே. சேதியும்
மறைத்து. எவ்வகை திறக்கும்
மறைபொருள் அறிய. திறம்
கொள் புலனும் கையறு காட்டி.
தவம் தரு ஞானம் ஒரு வழிசுட்டி.

பாறை இடுக்கில்
புலர்ந்த மொட்டை
பறித்து தேனும்
சொறிந்த அகமாய்
செறிந்த குருவிடத்து
சேவித்த தருணம்

வண்ணத்தி நிறம் புரிந்தது:மண்ணென்று
வடிவம் தரித்தது:ரௌத்ரமாய்
நிலைத்தது:நீரின் இடத்து

இணைக்கும் பொருளின் சேர்க்கை:
மண் பெரும் ரௌத்ரம் நீராய் மாறுமோ....

மாறியது நிலமும் ஆடி
கொண்டது பேரலையாய்....

Monday, August 20, 2012

களிமிகு நடம்


பாவைக் கூத்தும்
காண வந்ததில்
அரவும் ஒன்று
ஆங்கே கவர்ந்துற்று
தானும் நடமிட
ஆவல் கொண்டே
பிளந்த வாயில்
மெல்லென கவ்வி
பேதையை விழுங்க
ஆட்டம் குலையா
உடம்போடு பாம்பும்
களிமிகு தாண்டவம்
கடந்து கூட
தன்மதி மறந்து
கூத்தில் பொங்க
சீறும் நாகம்
வீசிய மலர்க்கொடி
ஆடும் நடனம்
சர்ப்பமாய் மாறி
பதுமையின் உயிரில்
ஊறும் விடம்