Sunday, January 26, 2014

வயங்கும் பருவங்கள்

பவளப் பருவம்

வேனில் முற்றும் காயாய் பூத்தது
கனியாய் முதிரும் சுகமாய் விளைந்தது
செங்குருதி முத்தாய் சமைந்ததில்
கானும் சடங்காய் அமைந்தது

அந்தருவப் பருவம்

பூஜ்யத்து நித்திரை கோசம் பெருக
தபசும் அனுபோத மருவத்தில் கோர்த்து
புகவிளங்க பூஜை ஆயும் மந்திரத்தில்
உன்னத பொற்பலமும் இலங்குவதில்

உணர் பருவம்

பாக்கியமும் மலர்ந்த ரோகணத்தில்
பையுள் முகிழும் திரண்ட யுகத்தில்
சர்ப்பம் விரையும் கமலச் செண்டில்
சரசமாடா பஞ்ச லோகத்து

புனர் பருவம்

மஜ்ஜை கலையும் கோண் முகில்
உற்பவித்த தாழ்பதி மண்டிலம்
மாச்சரியம் சூழ் மேவுலகு பண்பட்டு
விகற்பமும் தாண்டி லயத்தின் சொப்பனமாய்

புதை பருவம்

கூர்மம் புனைந்த பெருவெளி கோளம்
மன்னும் மீனும் இந்திர விஜயத்தில்
தயை துவர்ந்து தரங்கம் அதிர
வேணுவும் கானமாய் முரலும் வாக்கில்


மந்திரச்சிமிழ், ஆகஸ்ட் 2013- ஜூலை 2014 இதழில் வெளியான கவிதை.

Thursday, January 9, 2014

அகம் மற்றும் ஒரு முகம்

வளைந்தன கோடுகள்
முனை உரசி சரிய
மேலும் உயர்ந்து சரிந்து
கீழும் வீழ்ந்து நுடங்கி
வட்டமோ ஆரமோ
வில்லும் அல்லாமல்
கொடியும் போலே
விழியும் நேராய்
நிமிர்ந்த செருக்காய் நாசியும்
சற்றும் குவிந்து
இரு பிறை நெளிவென
இதழ்களும் பிரிந்து
இறுகும் கன்னம் தழைய
அகலும் நுதலும்
அடர் கூந்தல் கலைய
ஆடியின் பிம்பமாய்
சுடர் பொலிந்த முகமும்
சித்திரத்தில் வேறாய்
மெய்யென மறைத்து
மற்றை யாதொரு
அகத்தில் துலங்கிடவே

Monday, December 30, 2013

மற்றும் இணை மாறி

ஒன்றும் மற்றதுமாய் ஆதியில் நிலைகொள்ள
கண் மற்றும் ஓர் இணையாய்
செவி இரண்டென வகுத்து
உயிர் பிரிவதில் வேறாய்
வளியில் கலப்பினும் பற்றியது மற்றாய்
வாழ்தலினும் காணாது மாயத்தில்
சாதலினும் மறையாது காலத்தில்
விரவி பரவும் அடுத்த பரிமாணம்
உயிரற்றதாய் விலகிய பரிணாமம்
ஒற்றை மொழிதலில் சமனமடைந்து
கலைந்த பார்வையும் கரைந்த கேளலும்
வழிந்தது அரை முகம் கோணலுற்று
துடிப்பற்ற உடலும் குறுகி
என்பும் மறைந்து நரம்பும் முறிந்து
கல்லுமற்ற கனமுமற்ற புதுவடிவில்
ஞானம் கண்டது உணர்வின் குறிப்பை
அசைவற்ற சிந்தை அறிவது உட்பொருளை
புறமாய் இயங்கிய இருப்பின் கனிவை
ஈர்க்காது இறுகிய உக்கிர பருண்மை

Sunday, December 22, 2013

கனவுச் சாத்திரம்

இரவுப் பறவை
உமிழ்ந்த நெருப்பில்
கனவும் கலைய
இறுதிக் காட்சி
சொடுக்கிய நினைவில்
எருதின் கழுத்தை
பிணைத்த அரவும்
ஓலமிட்டு நகைக்க
புத்தொளி வீசிய
மணிக்கல் செம்மையில்
வெம்மை மறைய
குரலொன்று எழும்பி
கொடிபுரளும் மண்ணில்
நீரும் வற்றி
நிலைத்தாங்கு இன்றி
பிளக்கும் புவியில்
உயிர்காணா சாத்திரம்
தினம் பயிலும்
திறமதனை ஓதும்

Sunday, December 8, 2013

பரிதவிக்கும் இனம்

உளமோடு பதிந்தது பெயரும்
உவப்பாய் கொள்ளும் ஒலியிலும்
உணர்வெனும் பொருளின்மையாய்
கண்ணால் உட்புகும் மௌனத்தில்
சுற்றித் திரியும் மேயும் தாவும்
உணவும் பிணியும் அறிந்தது
இனமாய்ச் சேர்ந்தாலும் ஒன்றறியாது
மாவென்றழைக்கும் மொழிமாற்றி
உருவகித்து உள்ளும் உருவேற்றி
நுவல்தல் மட்டும் வேறுபட்டே
அத்துணை குணமும் நிறமின்றி காட்ட
உயர்வும் காணாது தாழ்வும் வீழாது
இயல்பும் மாறாது ஜீவன் என்றே
ஓம்பும் திறமதனை உடன் பெற்று
கடைபட்ட உயிரெனினும் தணியாது
மறைபொருள் புரியாது உலவி
சூதும் சூழ்ந்து சுரத்தில் பொதிய
தவமென்னும் உக்கிரத்தில் இறுதியாய்
அடர்ச்சுவடு ஆடிப்பரித்து மேவ
இன்னும் விடாது விலங்கிடை அணியும்
புதைந்து மையமாய் உவர் பெறின்

Sunday, December 1, 2013

ஒலிக்கும் பொருளாய்

ஓலியாய் நின்றது
உயிரும் ஒலித்ததால்
மெய்யென இசைத்தது
வளியும் சேர்ந்து
அகரம்தான் முதனிலை
அதுவும் இணைந்து
ஓகாரத்தில் ஓசையுடன்
உடல் பருப்பொருளாய்
தெளிந்த உணர்வுடன்
குரலும் வளைய
நாவும் குவிந்து விரிந்து
மூக்கின் துணையோடு
மூச்சின் சேகரத்தில்
உள்ளீடும் அதிர
அண்டத்தின் மோனத்தில்
ஆரவாரித்து அலைபாய

Sunday, November 24, 2013

அகம் விளக்கும்

மை காயும் எழுத்தின் பொருளாய்
உரத்து ஒலிக்கா நெஞ்சின் இசையென
கண்ணீர் பெருக்கும் முகிலாய்
விடிந்தது மலரில் குவியும் ஒளியன்ன
துள்ளும் மீனாய் வேட்கையில் குதித்து
தளரும் கடலாய் அலையில் மடிந்து
வேடம் கலையும் நிலவாய் நகைத்து
பால்வெளியில் நீந்தி பருகும் பனியன்ன
குணமடுத்த பூசனையும் பெய்து கொய்ய
வனம்கடுத்த வாசமாய் மொய்க்கும் வண்டும்
விழிகாத்த வினையில் வெட்கித்தாழ
பருவம் மாறி இலையும் உதிர்த்து
பாகாய்ப் பெருகிய வெள்ளத்தில் நனைந்து
கனலும் வெகுளியாய் குளிரும் கடுத்து
பழியும் உருவெடுக்கும் அச்சத் துகிலாய்
சிதறும் துளிபோல் ஒருங்கும் குலைய
கண்ணுரு கண்டு களித்த மேனியாய்
குகை போந்து துவளும் கொடியன்ன
முள்ளும் புதராய் நீண்ட பாதையில்
சிறகொடிந்து வீழ்ந்த சிறுபறவையாய்
உவகை பெற்று விருட்டென நகரும்
யாதோ ஏனோ எவ்வுவமையோ
ஈங்கு இவண் நிலை ஈடின்றி சரிய