Sunday, November 30, 2014

வனம் சிலிர்க்கும்

கூர்வேனில் குத்தும் தணல்
வெண்மதி தொடரும் பின்னந்தி
முகில் நிழல் மறைக்கும் பாதை
செவ்வண்டு இசை ஒலிக்கும்
பாதை துவளும் கொடியும் நுடங்கி
இலையும் உதிர்ந்து சலசலக்க
முயல் துள்ளி மரம் புகும்
கோண்மா நதி பாய்ந்து தளர
மின்னலென ஒளிரும் அணங்காய்
கிளை தாவி கூவென கூவ
அதிரும் பட்சியும் அடங்கி குமுற
சில்லென்னும் வளியும் பெயர
கானமும் செவியுறாது முடங்க
அடர் வலி போக்குமோ ஆரிருள் தனித்து

Sunday, November 23, 2014

உயிர் நிகழும் பருவம்

முற்றத்து நெடிதுயர்ந்து
கிளை பரப்பி நீள
செம்மலர் வளர் பருவம்
நகைத்து முரணாக்கி
தளிர் இலை சொறிந்து
விடுதலை யுணர்த்தி
செப்பும் அலையில்
வளி மீதுலாவி
இடர் அறிந்து
அகத்தின் வாசம்
மெல்லியதாய் பகிர்ந்து
இளம் முறுவல் அறிய
முகம் யாதென்று
காணா வளைவில்
படிந்தது குணம்
பச்சையின் இயல்பாய்
இரவில் செழித்து
ஒளியில் செறிந்து
எண்கோடி அணுவும்
மண் பிரிந்த நீராய்
வேரின் பிடிப்பில்
நிலைத்திருப்பதாய்
நகரும் கனவும்
உய்விப்பதாய்
அடரும் கானகம்
விருப்பின் புள்ளியாய்
வான் மறைத்து
இருளின் துணையுற்று
முளைத்த கணம்
இதுவென் திளைக்க

ஏட்டில் விளைந்ததாய் கனிந்ததாய் வர்ணிக்கும் இவ்வுயிர் நிகழும் தருணம் யாவிலும் நிறையும் என பரிணமிக்க.

Monday, November 3, 2014

புள்ளின் அசைவு

மண்ணில் புதைந்த
சிரத்தை மீட்டு
வானின் மையத்தை
தேடும் அலகுடன்
சிறுமென் நடைநடந்து
துள்ளும் மீனைக்கவ்வி
இயல்பென் ஆக்கத்தில்
தம்மையும் இணைத்து
மேகத்தின் அசைவதனை
மெய்யில் ஏற்றி
தன்னில் பிரிந்த
தனதின் நிழலும்
விசும்பில் படிந்ததாய்
வினை பயின்று
தானும் தன் பிம்பமும்
பரிமாண வெளியில்
அலையும் பேற்றினை
வடிப்பதனை பாவை
இயற்றும் திறம்யாதென
புள்ளின் மொழியில்
பெயர்த்து புகல்வதும்
பொருளின் சான்று
எனவே கிளைத்து
வரித்தது இங்கண்

Sunday, October 26, 2014

உம் எனும் ஓசைத்துளி

ஓர் பொருள் ஓர் நிறை
பாவின் உள்ளில்
ஊற்றெடுக்கும்
கவியின் கலி

ஓர்மையில் சிரத்தையும்
மேலாய் கீழாய்
இடமாய் வலமாய்
அசைத்தும் நகர்த்தும்
சொல் விளையாட்டு
என குறுக

உறக்கமும் மேவிடாது
இரையும் ஆட்டுவித்து
கிடக்கை அறிவிக்கும்
பூனையின் மெல்லொலி

சிறு பூவும் மலர
மகரந்த விதியின்
செறித்தலோடு ரீங்கரிக்கும்
மென்பொன் வண்டாய்
உருவகித்து

சலிக்கும் பொருண்மை
யாவும் சலித்து
மரபின் உசாப்பு
தவிர்த்து இலங்கி
இங்கு அளபெடையில்
வரிந்திருக்கும் ஓசைத்துளி

Monday, October 6, 2014

நீதியின் செலவாய்...

சருமத்து மீட்டிய
சுகித்து முயங்கும்
கருவியின் சிணுங்கலில்
எதிர் முனை குவியும்
தன் நயப்பை வழிய
உறியும் எண்கணித
வாய்ப்பாடும் தடைபட
கேளலும் களிப்பாய்
சொன்மையும் உள்சுழிப்பாய்
இன்கண் என்றே ஒலித்து
ஆட்டம் துவங்கி
உச்சத்தின் இறுதிவரை
சொப்பன உயவில்
உள்ளின் உள்ளில்
மானத்தை மீட்காத
வலியின் நுகர்சாயல்
ரூபத்தின் பிளவதனை
தவிர்த்து விலக்கி
பொய்யன்ன புனையும்
போகச் சருக்கம்
நீதியின் செலவாய்
தீர்த்தலில் மிகும்

Sunday, September 21, 2014

பயணித்து...

நீள்கோடாக நீண்ட
வெண் புள்ளிகள்
இணைகையில்
இரு ஞாயிறும்
சில கிரகங்களுமாய்
ஒரு குடைவிரிந்த செடி என
உணர் பொருள் மறுத்த
எந்திரத்தின் இயக்கமாய்
அகப்பேச்சின் சாரத்தில்
ஒளிப்பயணம் பூண்டு
சங்கிலித் துளையில் புகுந்து
யாச்சொல் அணைத்து
ஆயுதமும் கூட்டாய்
இறுதியின் உள்ளில்
காணும் அறிவதன்
புலனை மறைத்து
நனவும் துவண்டு
ஒற்றை எழுத்தின்
மடிப்புடன் தொடங்கி
பெயரிட்ட இழிவின்
வசப்பட்ட ஞானமாய்
காலமும் நின்று
பின் பயணித்து
புவியின் மையம் குவிய
ஈர்ப்பை மாற்றி
திசையும் பிறழ
வடிந்தன புலவின்
மீக்கூறும் வினையாவும்
வளைந்தது வேற்றின்
உருவமாய் ஒரு கூற்றம்

Sunday, September 14, 2014

குமிழி

குமிழியும் பறக்க இடைவிடாது
வளியின் வழியில் தொடர
உள்ளும் புறமும் நிரம்பிய காற்று
நீரைச் சுமந்து ஆவியின் துளியில்

நீர்மத்தில் மிதக்கும் குமிழியும்
வளி உட்கொண்டு சிறுகச்சிறுக பெருத்து
கண்ணின் உள்விழி என மாறி
உள் கவிந்து கலக்கும்

உமிழும் நீரில் ஓரு குமிழி
உள்ளின் சொல்லாய் கிளம்பி
வெளியின் வளியாய் உள்புகுந்து
உண்ணும் இன்மையின் பொருளென