Tuesday, February 24, 2015

பேருருவச் சித்திரம்

பெரும் பாதம் பதிய
மலை முகட்டு சிரத்தை
அசைத்து குனியும்
பல்லாயிரத்து உயிர்
கடுகு சிறுத்த உணவும்
உள்ளங்களை நீளலும்
காணாத அகல்வாய்
பிளந்து கல்உருளும்
ஓசையில் எயிறும் சேர
உறக்கம் கனிய
ஊர்ந்து சரிய
கருநிழல் அண்டத்தில் வீழ
பகுதியாய் உள்ளொளியில்
உருவும் விளக்கம் பெறாது
ஒற்றை நிமிரலில்
கிரகங்கள் தாண்ட
பாறை நகரும்
சாயை விளம்பும் மாயத்தில்

                       உகிர் ஒன்று மரமானதாய்
                       என்பும் உயர் கோபுரமாய்
                       தொகுக்கும் சான்றுகள்
                       திகிரியின் அடுக்கமாய்
                       பிழைத்தது எச்சமாய்
                       சுருங்கியது குணத்தினதாய்
                       அரவமும் பேச்சாய்
                       விடமும் சிந்தையாய்

Sunday, January 4, 2015

முள் நிறமிழந்து

முள்ளின் நிறமும்
மலரின் மணமும்
கோரிப் பெற்றன
மகிழ்வின் மணத்தை
நேசத்தின் குணத்தை
பரிவின் நுகர்வை
பெரும் ஒலிகொண்டு
மீட்டிட இனத்தின்
பான்மை சொல்லும்
பொருளில் அல்லாது
இனிமையில் நிகழ்ந்து
புலன் யாவும்
ஈர்த்ததாய் விளம்பி
மானத்தின் நுனியில்
அற்றமும் கவிழ்ந்து

Sunday, December 21, 2014

வெப்பம் சூழ்ஆழம்

கோளத்தின் உரு
பெருவெப்பம் சூழ்ஆழம்
தனிக்குவியம் எரியும்
நீர்மத்தின் கலவை
குணம் கூடி வழிய
திசை ஏதும் இன்றி
பரவும் திரவமாய்
குகையின் வழி துளை
கொண்டு பறக்க
வான் கடந்து வகை
பெற்று மீண்டு நீள
அந்தமில் லோகம் என
இடம் முற்றாக
ஆதியின் காலமாய்
விசும்பு வருடும் வளி
போற்றும் நெறியாக
அலை மூலம் தெளிவித்து
தொலை நிகழ் புரிவதாய்
கூர்ந்து வியங்குறு
வழியும் கூறாய்
இணைந்து பயில

Sunday, December 14, 2014

இசை எல்லை எனும் ஆக்கம்

நேசத்தில் குருவிகளின் கீச்சொலி
ஏட்டில் ஒலிப்பதாய்க் கேட்க
சின்னக் கிள்ளைகளாய் மிழற்றும்
இசையும் அறியாத ஓசையென
கானமாய்ப் பதிந்திருக்க
வனம் கொள் மாதும்
மாயப் பறவையின் நிறம்
ஒன்றைப் பாடி நிற்க
துயர் எனும் குரலாய்
காவியத்தில் சங்கமிக்கும்
மென்மைதனை செப்பி
கின்னரகீதம் பொழியும்
பெயர் அறியா புனைவுப் பட்சி
எனவே புலம்பும் பாவின்
சங்கீதச் சருக்கம் நகும்
புள்ளின் கனவது எனும்
கவியின் பேரெல்லை
கண்டும் கேட்டும் உண்டும்
உயிர்த்தும் உற்றறிந்தும்
செவ்வனே விட்டுவிடுதலையாகி
அடைக்கலமாகுமோ இயல்பின்
பாற்பட்ட ஆக்கத்தில்

Sunday, December 7, 2014

பதம் விளைந்த கவி

சொல் உண்டு
ஊண் எழுதி
எயிற்றின் கடையில்
தான் எனச் சிக்கி
விரல் ஊடாய் ஒளியும்
பிரித்தது நீர்மமோ நிறமோ
குருதி கனத்து வழிய
பதிந்தது சுவடியில்
எண்ணாயிரம் எழுத்தாயிரம்
கண்ணும் மயக்கி
உருவென கொண்டு
திணைசார் விருந்தாய்
திகட்டா அலகுடன்
தூற்றா பொருளில்
வேட்டலம் பாய
தறிவிடுத்து கோர்வையில்
நிலைமாறி விதந்து
வினைமேவும் காலை
சுயமும் மோகித்து
சுகமாய் பாவித்து
பேச்சும் இன்றி
முழு சிந்தையும் பயின்று
உறியப் பெற்றது
சக்கையினும் கீழாய்
சரிந்திட்ட பதமென
காணும் ஓர் கவியில்

Sunday, November 30, 2014

வனம் சிலிர்க்கும்

கூர்வேனில் குத்தும் தணல்
வெண்மதி தொடரும் பின்னந்தி
முகில் நிழல் மறைக்கும் பாதை
செவ்வண்டு இசை ஒலிக்கும்
பாதை துவளும் கொடியும் நுடங்கி
இலையும் உதிர்ந்து சலசலக்க
முயல் துள்ளி மரம் புகும்
கோண்மா நதி பாய்ந்து தளர
மின்னலென ஒளிரும் அணங்காய்
கிளை தாவி கூவென கூவ
அதிரும் பட்சியும் அடங்கி குமுற
சில்லென்னும் வளியும் பெயர
கானமும் செவியுறாது முடங்க
அடர் வலி போக்குமோ ஆரிருள் தனித்து

Sunday, November 23, 2014

உயிர் நிகழும் பருவம்

முற்றத்து நெடிதுயர்ந்து
கிளை பரப்பி நீள
செம்மலர் வளர் பருவம்
நகைத்து முரணாக்கி
தளிர் இலை சொறிந்து
விடுதலை யுணர்த்தி
செப்பும் அலையில்
வளி மீதுலாவி
இடர் அறிந்து
அகத்தின் வாசம்
மெல்லியதாய் பகிர்ந்து
இளம் முறுவல் அறிய
முகம் யாதென்று
காணா வளைவில்
படிந்தது குணம்
பச்சையின் இயல்பாய்
இரவில் செழித்து
ஒளியில் செறிந்து
எண்கோடி அணுவும்
மண் பிரிந்த நீராய்
வேரின் பிடிப்பில்
நிலைத்திருப்பதாய்
நகரும் கனவும்
உய்விப்பதாய்
அடரும் கானகம்
விருப்பின் புள்ளியாய்
வான் மறைத்து
இருளின் துணையுற்று
முளைத்த கணம்
இதுவென் திளைக்க

ஏட்டில் விளைந்ததாய் கனிந்ததாய் வர்ணிக்கும் இவ்வுயிர் நிகழும் தருணம் யாவிலும் நிறையும் என பரிணமிக்க.