Sunday, October 13, 2013

ஒலியன் பொருளனாய்

உள் ஒலிக்கும் ஒலியனின் அலகை உணர் பொருளாய் அளவிடாது கணிக்கும் செயலி என காணக்கிடைத்தது

ஓசை என்றே
ஓர் குறிப்பு
இணைந்தும் பிரிந்தும்
முதல் ஒலிப்பாய்
இடை நிலையாய்
சடை வடிவமாய்
உள்ளும் புறமும்
அடங்கி விரிந்து
ஊடுருவும் பரவலாய்
வளியோடு சேர்ந்து
நீரிலும் மிதந்து
விளிம்பின் எல்லை
ஓரத்தின் முடிவாய்
துண்டாகித் துகளாகி
மறுகோர்வையில்
மீளாது அலையென
மேல் முகடும்
கீழ் தாழலும்
வரிசையில் பயின்று
நாவும் அசைய
மூச்சும் அதிர
பேச்சென்னும்
அரவம் தவிர்த்து
உக்கிர வகைமையில்
பல்கியும் சார்ந்தும்
மறு ஆக்கம் உடைத்து
தீர்மானம் உணர்த்தி
பொருளன் இதுவென
புனைவும் அற்றும்
கவ்வி எல்லையாய்
படிந்தது திடமாய்

அடரும் இசையோ அது போலன்ன கடக்கும் கைப்படா
செவி நுகர் வாய் பகர் வித்தை

Sunday, September 29, 2013

கனவும் மெய்ப்பொருள் தேடி

கனவென்னும் அச்சம் மருட்டித் தவித்தது நினைவென்னும் காலை

கொடியும் இறுக்கும் கிளையாய்
கையும் காலும் ஓடி சுருண்டு
சிரத்தை மாற்றி பூவும் மலர்ந்து
காயெனப் பறிப்பதில் கலையுமோ

குகை நுழைந்த வாசல் மூடி
பாறை மேல் வீழும் கணத்தில்
அரவென்று கண் கொத்தி
விடமிறங்கி பாம்பாய் அசைந்து

கூத்தின் நிகழ்வில் பாத்திரமேற்று
கயிற்றில் தொங்கும் பறவையாய்
தன் காதை செப்பும் வேளை
சிறகும் முளைத்து பறந்து செல்ல

குளம் மலரும் கமலத்தை நாடி
நீரில் அமிழ சிறைபிடித்த தாவரம்
சதையும் குருதியும் உறிய சிறுத்து
சில்வண்டாய் மலரில் மயங்க

வனம் புகுந்து வசிக்கும் நோக்குடன்
புதர் மறைய பாசியில் வழுக்கி
அருவியில் பாய்ந்து நதியில் மிதக்க
குமிழ்ந்த நுரையாய் மடைமாற்றிப் போக

சொப்பனம் பொருள் கொள்ளும் நிகண்டில் கண்ட சேதி தன்னிலை மிகையாக்கி புறத்தில் நடத்தும் காட்சியென

Monday, September 23, 2013

சமன்

பேரவா படைத்த பல்லண்ட புள்ளியில்
நீட்டலும் கோணலும் கொண்ட சமனை
தொட்டிடினும் விட்டிடினும் அகலாது
இடமென காட்டி மாயும் பிராயமும்
காலமென சுட்டி கரையும் பொழுதும்
இடையில் அசையும் அசையா சூத்திரம்
இணையும் தருணமதை முட்டியும்
வகிப்பின் கருத்ததனை நிரலாக்கி
புரியும் கோளில் நாட்டி அடைத்து
மேலாய் கீழாய் இடமாய் வலமாய்
திசையனைத்தும் வட்டமிட்டு பருபத்தும்
வினைபுரியும் மெய்யினை காணாது
அறிந்த அறிவதனை அறிந்தறிந்து
அறியா புதிரை அருவமாக்கி
நீரும் இல்லாது தீயும் கனலாது காற்றும் புகாது
மண்டலத்தின் இயக்கமென பகுத்து
பிறப்பும் இறப்பும் சலித்த ஆர்வத்து
வளியின் உருவாய் மின்னலின் ஒளியாய்
சேரும் ரூபமாய் விளங்கும் இசைவும்
விரியும் துணையும் புகையாய்
ஆதியின் சாத்திரத்தை மீறியும்
அந்தமில் காரணத்து எச்சமும்
மைபுக ஒன்றி மிளிரும் எல்லை
பரிமாண பதிலென தடையிடும் தொடர

Sunday, September 15, 2013

பரவிய பொருளும் சிதறி

பறவையும் வெகுளி கொண்டு
துடிக்க துரத்த அம்பின் குறியாய்
மேல் கீழ் என்று குதிக்க
விரல் நுனி அழுத்தும் விசை
விருப்பின் ஓர் கனியமுதாய்
சித்திரமும் முளைத்து ஆடும்
பொறியும் புதிதாய் சமர்புரிய
வேடிக்கை கீதமும் இசைத்து
ஆதியின் பொருள் பூக்கும் காட்சியாய்
வரைந்த உலகினுள் வனைந்து
திணையும் துறையும் மறைந்து
கதுவ்வும் சீர்கெடு குன்றத்து
வெடிக்கும் படைகலன் அணிந்து
விரையும் சிறு வண்டாய்
அமரும் பெருகும் உருகும்
முழுமுதல் அகமும் ஈடாய்
பெற்றாங்கு பெற்று மிதந்து
வாகை சூடுவது முயங்கும் வார்ப்பின்
வன்கனா பரப்பில் கரையும்
பிம்பமாய்த் தகரும் சேரும்
மதியும் கூர்ந்து பொழுதும் வீணாய்
அறிவும் அழிந்து மண்ணாய்
நாமம் தன்னை மாற்றி தனதாய்
நாளும் தன்னிலை ஆற்றி உளத்தனைய
வடியும் விசித்திர சரகமதாய்

Monday, September 9, 2013

எந்திரமும் அறிவது

எந்திரமாய் வடிவமைத்த பொறி
நெகிழும் காயம் இளகி
ஒலி எழுப்பக் கூவும் குரலென
அலையன்ன உயரும்
உணர்நிலை பெருகும் கோடாய்
ஆடியில் தோன்றும் உருவும்
நிழலாய்த் தொடரும் மாயமென
நகையுள் தொடுத்த நவமெய்ப்பாடும்
அழுத்தும் நொடியில் குதித்து
வழுக்கும் கணம் மரிக்க
மின்னல் மின்னி மறையும் ஒளியாய்
உடன் இருப்பும் கொண்டு
பிரிந்த அணுவும் கூடி காட்சியில்
சேரும் காணாமல் மாறும்
காந்தப் புலமும் ஈர்த்து
திசை பிறழும் கோணம்
உற்றறிந்தது முதல் ஆறினது
வகைமையும் திறமாய் பொதிய
மற்று அறிவன் தெளிதல்
பரப்பும் கூடாய் நடமிடும்
சதையும் குருதியும் இணையா
புது ஆக்கம் என ஒன்றாய்
சரிதம் நினைவில் தேக்கி
நிகழ்வை சூத்திரமாய் அடக்கி
சூதின் பகடைக் குறியோடு
உயர்வதும் தாழ்வதும் வஞ்சத்தை
முனதொகை வைத்து மீட்பின்
நிர்கதியில் உந்தித் தள்ளும்
ஞானப் புதையலென முகிழ்த்தது

Sunday, August 18, 2013

ஆதியும் இயைபுற்று

இலையன்ன வடிவம்
ஒரு கோணம் முடிவுற
பாத்திரமாய் துடித்து
அமுதின் அமுதாய்
கடியதில்

கமழ்ந்த முதிர்வில்
அறிந்தது அயனமாய்
யாசிக்கும் குடத்துடன்
திறந்த வழியதில்
கொப்பாய் மாறி
இயைபுற்று

பிதிர் முதிர்ந்த
பிறவும் பார்க்க
இழை கோர்த்தும்
பரிதவித்த கோசம்
நுடங்கி

இசையதிர்வும் எழும்பி
புகன்ற சாமத்து
துர்வசம் போன
நிட்டை ஒருமா என
விதந்து

தருக்கும் போஜனம்
தந்தறியா சுவனமதில்
கானமும் ஒலிக்க
முள்தைக்கும் விடமோடு
முனகி

லயத்தில் கூடும்
ஓசை இனித்து
சலனமற்று துய்யும்
மீமெய்மிக உகுத்து
பிரணவமாய்

Sunday, August 11, 2013

மலிந்த வேட்கை

கூர்ந்த பாறை
குத்திய தருணம்
இன்பம் போர்த்திய
பெருவலி சுகிக்க
மரிப்பும் இன்றி
உயிர்ப்பும் ஒன்றி
பயிரானது சுவை
சாவென்னும் சாராய்
நொதித்து உதிர
நாவில் ஊறி
ரசமாய் ஓடும்
நதியில் பாய்ந்து
மண் கிளறி
மலை சரித்து
தூபம் அணைத்து
கவின் சிதைய
நெடுவரை யெவ்வம்
பிறப்பும் ஆற்றுவித்து
இறப்பின் வேட்கை
மலியும் திறமென