Sunday, July 27, 2014

யாமற்றது

எம்மை ஞாலத்தின் மீதமர்த்தி
வரித்துச் செப்பிய உருக்கோளமாய்
மையத்து தொகுப்பிலும் மிதந்து
உணர் இழை நீண்டு அண்டம் சுருட்ட
உலகு தாங்கிய பாரம் காணாது
அரற்றும் ஆங்கொருவன் மிரண்டு
பால்வெளியும் கடந்து ஒளியும்
பீறிட்ட சிறுதுளை வழி பயணித்து
பாதம் எட்டும் மீனில் பதிந்து
விண்வரைவாய் வேகம் கொண்டு
கதிர் தாண்டி சூளும் துகள் மீண்டு
பல் சராசரங்கள் உள் கவர்ந்து
பருமளவின் பரிமாணத்தகலத்து
பரவி பெருகி விரிந்து அகண்டு
பற்றிழையில் யாம் கரைந்தும்
நிரப்புவித்தும் நிறைந்தும் நிலாவியும்
ஒர் குமிழில் அடைபட்டு பிளவுற்றும்
எம்மில் இருமையாய் பன்மையாய் விளைய
                           பிறக்கும் எழுத்தும்
தோன்றும் எண்ணும்
அறியாத இயலின்
அடையாளதிதல் ஒன்றாய்
வேறாய் பலதாய்
எம்மை வனைந்து
எம்மை புனைந்து
யாம் மறைந்த பிறிதின்
திரிபுற்று பொருள்
வழியை நவில்ந்து
  தொடர் பெயர் சுட்டும்
கோர்த்து விதியும்
எச்சமாய் வகுத்து
வினையும் செயல்பட
அறிந்திரா நன்மொழியில்
யாம் வடிந்திட
                          எம்முள் அந்நியமாய்
ஒதுங்கும் யார்
இச்சொல் நிகண்டை
தருக்கிச் சேர்ப்பது
என துருவத்தின் முனையிலும்
புரளும் காலத்தின் முடிவிலும்
வினாவ எம்மில்
காணா விடையும்
எம்மின் பதிலியாய்
  முதிரும் யாமற்றது

2 comments:

மனவெளி said...

அருமை

Mubeen Sadhika said...

நன்றி மனவெளி